திங்கள், 7 மார்ச், 2011

அபராதம் ஒரு ரூபாய்


தன் மகனை அழைத்த தந்தை, "நாம் இருவருமே இனிமேல் தவறு செய்யக் கூடாது. யார் எந்தத் தவறு செய்தாலும் அதற்கு அபராதமாக இந்த உண்டியலில் ஒரு ரூபாய் போட வேண்டும். அப்படிச் சேரும் தொகையைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட வேண்டும்" என்றார்.
மகனும் இதற்கு ஒப்புக் கொண்டான். அவரின் திட்டம் அப்படியே நடந்தது. திடீரென்று அவர் உடல்நிலை மோசம் ஆயிற்று. உண்டியலில் இருந்த பணத்தை எல்லாம் பிள்ளையார் கோயிலுக்குத் தந்துவிட்டு மருத்துவ மனைவில் சேர்ந்தார்.மகனைப் பார்த்து, "நான் இல்லாத போதும் இந்தப் பழக்கத்தை விட்டு விடாதே. ஒரு தவறுக்கு ஒரு ரூபாய் உண்டியலில் போட்டுவிடு" என்றார்.மருத்துவ மனையில் மூன்று மாதம் தங்கிய அவர் வீடு திரும்பினார். உண்டியலைத் திறந்து பார்த்தார். அதில் ஒரே ஒரு ரூபாய் தான் இருந்தது.மகிழ்ச்சி அடைந்த அவர் தன் மகனை அழைத்தார். "இந்த மூன்று மாதத்தில் ஒரே ஒரு தவறு தான் செய்தாயா?" என்று கேட்டார்."இல்லை அப்பா! உண்டியலில் முந்நூறு ரூபாய் பணம் சேர்ந்தது" என்றான் அவன்."அந்தப் பணத்தைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட்டாயா?" என்று கேட்டார் அவர்."அப்பா! உண்டியலைத் திறந்து அந்தப் பணத்தை நானே எடுத்துக் கொண்டேன். அந்தத் தவறுக்காக நீங்கள் சொன்னபடி ஒரு ரூபாயை உண்டியலில் போட்டு விட்டேன்" என்றான் அந்த கெட்டிக்கார மகன்.

மதம்



  இறக்கும் தறுவாயில் இருந்த ஒரு மகான் சாத்தானை வணங்கிக் கொண்டிருந்தார். அவரது உறவினர்கள் அவரிடம் வந்து என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இறைவனை வணங்காமல் சாத்தானை வணங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டனர்.
அதற்கு அவர் நான் இறந்த பின்னர் எங்கே போகப்போகிறேனோ தெரியாது.ஒருவேளை நான் சாத்தானிடம் செல்ல நேர்ந்தால் அவனை நான் வணங்கினேன் என்பதற்காகவேனும் என்னை அவன் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுவான்.
  ஒருவேளை நீங்கள் கடவுளிடம் செல்ல நேர்ந்துவிட்டால் என்று உறவினர் கேட்டதற்கு,
  நாம் கடவுளைப் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை. அவர் அன்பானவர் நாம் அவர் மீது வெறுப்பைக் காட்டினாலும் எப்போதும் அவர் நம்மீது அன்பாகவே இருப்பார் என்றார் அந்த மகான்.

உண்மையில் மதங்கள் கடவுள் பற்றிக் கூறும் விளக்கங்களை கேட்கும்போதுகடவுள்மீது பக்தி ஏற்படுவதைவிட அதிகமாக பயம்தான் ஏற்படுகிறது. எந்த மதத்தவராய் இருந்தாலும் எங்கள் மதம்தான் உண்மையான கடவுளின் மதம்; மற்றவர்கள் சாத்தானின் வலையில் சிக்கியிருக்கிறார்கள்; நீங்கள் சாத்தனிடம் இருந்து விடுபட்டு விரைவில் எங்கள் சபையில் இணைந்து கொள்ளுங்கள்; இறைவன் ஆட்சியில் புதிய பரதீஸ் உருவாகப் போகிறது அங்கே நமது கடவுளின் விசுவாசிகளாய் இருப்பவர்கள் மட்டுமே வாழ்வார்கள்; மற்றவர்கள் சாத்தானோடு கொடிய நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்றெல்லாம் மதநூல்களில் போதிக்கப் பட்டிருப்பதையும்கூட சுட்டிக் காட்டுகிறார்கள். இந்தக் கதைகளைக் கேட்டால் நமக்கும் கொஞ்சம் வயிற்றைக் கலக்குகிறது இல்லையா! மேற்கூறப்பட்ட குட்டிக்கதை இதைப் பற்றித்தான் விளக்குகிறது.

மதம் யானைக்குப் பிடித்தால் காடு அழியும்
அதுவே மனிதனுக்குப் பிடித்தால் நாடு அழியும்,
இதை உணராத வரையில் இந்த பூமியே நரகம்தான்!
                                                                                                   பிரபா

மழலையின் ஆசை



ஒரு நாள் தந்தை வீட்டுக்கு தன் வேலையை முடித்து வருகிறார். அவரிடம் மகன் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு வருமானம் வரும் என்று கேட்கிறான்.

தந்தைக்கு ஒன்றும் புரியவில்லை. “எதற்காக கேட்கிறாய்...?” என்றார்

“எனக்கு சொல்லுங்கள்... ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு வருமானம் என்று மீண்டும் தன் கேள்வியை” கேட்டான்.

தந்தை சன்று யோசித்து.... “ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் வருமானம் வரும்... இப்போ சொல் எதற்காக கேட்கிறாய்...?”

மகன் .. “சரி... எனக்கு 100 ரூபாய் பணம் வேண்டும்” என்றான்.

தந்தைக்கு கோபம் வந்தது. “உனக்கு எதுக்கு அவ்வளவு பணம்? காரணம் சொல்லாமல் தர முடியாது... போய் படு...” என்றார். மகன் அழுதுக் கொண்டே தூங்க சென்று விட்டான்.

சற்று நேரம் தந்தை யோசித்து, தூங்கிக் கொண்டு இருக்கும் மகனிடம் சென்றார். ஆனால் அவர் மகன் தூங்கவில்லை. தந்தை அவனை ஆறுதல் படுத்துவதற்காக அவனுக்கு 100 ரூபாய் கொடுக்கிறார்.

மகன் முன்பே 100 ரூபாய் வைத்திருந்தான். தந்தை கொடுத்த ரூபாயும் சேர்த்து வைத்துக் கொண்டு இருந்தான். தந்தை முன்பே 100 வைத்திருக்கும் போது “எதற்காக 100 பணம் கேட்டாய்?” என்றார்.

அதற்கு மகன்... “ஒரு மணி நேரத்திற்கு 200 ரூபாய் வருமானத்தை தருகிறேன். நாளை ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வர முடியுமா.... என்னுடன் உணவு அருந்த வேண்டும்” என்றான்.

தந்தை தன் தவறை உணர்ந்தார். தான் யாருக்காக இரவு பகலாக பணம் தேடுகிறமோ அவர்களுக்காக செலவிட நேரம் ஒதுக்குவதில்லை. ஒரு சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பணம் தேவை என்று தான் நினைக்கிறார்கள். அவர்களுக்கு தேவை கவனம் என்பதை மறந்துவிடுக்கிறார்கள்.

ஏழை என்றால்



எதற்கும் உதவாத மகனை பெற்று விட்டோம் என்று வருந்திய பணக்காரர் தன் மகனுக்கு ஏழை என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ள அவன் கிராமத்துக்கு அனுப்பி வைக்கிறான். அந்த மகனும் தன் தந்தையின் கிராமத்துக்கு ஒரு வாரம் தங்கிவிட்டு தன் வீட்டுக்கு வருகிறான். தந்தை மகனிடம் ஏழைகளை பற்றி தெரிந்துக் கொண்டாயா என்று கேட்டார்.

“நம்மிடம் ஒரு நாய் இருக்கிறது.அவர்களிடம் நான்கு உள்ளது.

நமக்கு குளியல் அறை உள்ளது. அவர்களுக்கு குளிப்பதற்கு பெரும் ஆற்று நீரே உள்ளது.

நமக்கு வாசல் கதவு வரை தான் சொந்தம். அவர்களுக்கு தொடுவானம் வரை சொந்தம்.

நாம் குறுகிய நிலத்தில் வாழ்கிறோம். அவர்கள் பெரும் நிலப்பரப்பில் வாழ்கிறார்கள்.

நமக்கு மற்றவர் பணிவிடை செய்கிறார்கள். அவர்கள் மற்றவருக்கு பணிவிடை செய்யும் அளவிற்கு வலிமைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

உணவுகளை நாம் வாங்குகிறோம். அவர்கள் உணவு பயிர்களை வளர்க்கிறார்கள்.

நம்மை சுற்றி நான்கு சுவர்கள். அவர்களை சுற்றி நண்பர்கள்.

நாம் இவ்வளவு பெரிய ஏழை என்ற உணர வைத்ததற்கு நன்றி.”
அந்த மகனின் தந்தை வாய்யடைத்து நின்றார்.



நலம் தரும் வேம்பு



 வேம்பை ஒரு சதாரண மரமென்று எடைபோடமுடியாது. இது அதிகம் சக்தி வாய்ந்த ஒரு சஞ்சீவிமரம். இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட பரிசுதான் வேப்பமரம் என்றால் அது மிகையாகாது. விஞ்ஞானிகள் இதனை அதிசய மரம் என்று வியந்து கூறுகிறார்கள். வேம்பினை இந்துக்கள் நீண்டகாலமாக பயன்படுத்திவருகின்றனர். வலி, ஜீரம், தொற்றுநோய் போன்றவற்றிலிருந்து நிவாரணம்பெற வேம்பையே பயன்ப்டுத்தியுள்ளனர்.வேப்பங்குச்சியால் பல்லை சுத்தம்செய்கிறார்கள் வெப்பிலைச்சாற்றை தோல்நோய்களுக்கு பயன்படுத்துகிறார்கள். பசியைத்தூண்ட, பித்ததைக் குறைக்க, உடல் வலிமைபெற போன்ற உடற்கோளாறுகளை போக்க வேப்பிலையை கொதிக்க வைத்து கசாயமாக்கி தேனீரைப்போல் அருந்துகின்றனர்.

1959 ஆண்டு சூடான் நாட்டில் கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் ஒன்று சேர்ந்து  வேப்ப மரத்தைத் தவிர மற்ற ஏனைய மரங்களின் இலைகளை முற்றிலும் அழித்தது இதை அவதானித்த யேர்மனிய ஆராய்ச்சியாளர் ஹேயன் ரிச்சும் அவரது மாணவர்களும் இதை உலகிற்கு அறிவித்தார்கள் அதன்பின் விஞ்ஞானிகள் பலரின் கவனம் வேப்பமரத்தின் பக்கம் திரும்பியது ஆராய்ச்சிகளில் கிடைத்த முடிவுகள் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திவிட்டது. அவர்கள் வேம்பைப் பற்றி நடாத்திய ஆய்வுகள் அனைத்தும் நம்பிக்கையான முடிவுகளையே தந்திருப்பதாக தெரிவிக்கிறனர்.

வேப்பமரத்தின் பயன்கள்
வேம்பு (mahogany) மஹோகனி என்ற தாவர வகையைச் சார்ந்தது. இது 30 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது . 2.5 மீட்டர் இதன் அதிகூடிய பருமனாகும். இது வளமற்ற நிலத்தில்கூட வேகமாக வளரும். பராமரிப்பு எதுவும் தேவையில்லை. இந்த மரம் எப்போதும் இலைகளோடே காணப்படுவதால் வருடம் முழுவதும் நிழல் தருகிறது. வேம்பை வீடுகளில் வளர்ப்பதனை இந்துக்கள் ஒரு வழக்கெனக் கொண்டிந்தாலும் அதற்கான விளக்கம் என்னவென்றால், வேம்பைச்சுற்றி ஆநவசந நோய் எதிர்ப்புசக்தி உள்ளதென்றும் காற்றானது தூய்மையடைகிறது என்றும் சொல்லப்படுகிறது. சித்த ஆயுர்வேத மருந்துகளில் வேம்பின் பயன்பாடு அதிகமாக காணப்படுகிறது.(ஆயுர்வேததில் இதனை நிம்பா என்ற பெயரில் குறிப்பிடுகின்றனர்) இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்கு ஆபிரிக்காவில் நிழல் தருவதற்காகவும், சஹாராப்பாலைவனம் தெற்கு நோக்கிப் பரவுவதை தடுப்பதற்காகவும் வேம்பு அங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. காடுகளை வளர்ப்பதற்காக மத்தியகிழக்கு நாடுகளிலும், மத்திய தென்னமெரிக்க நாடுகளிலும் வனக்காப்பாளர்களால் வளர்க்கப்பட்டு வருகிறது.

வேம்பிலிருந்து தயாரிக்கப்படும் புச்சிக்கொல்லி மருந்துகள் இரசாயன மருந்துகளில் உள்ள டைல மேட்டைவிட அதிக சக்தி வாய்ந்தது இதனால் மனிதருக்கோ, விலங்குகளுக்கோ, இயற்கைக்கோ எந்தவகையிலும் பதிப்பும ஏற்படாது. வேப்பமர புச்சிகொல்லி மருந்துகளை தெளித்தால் அதன் மணம் உள்ளவரை வெட்டுக்கிளிகளோ அல்லது வேறு பூச்சிகளோ செடிகளை அழிக்காமலிருக்கின்றன. இரசாயன மருந்துகள் தெழிக்கப்பட்ட தாவரங்களை உணவாக உட்கொள்ளும்போது பல பின்விளைவுகளை மனித உடலில் ஏற்படுத்துகின்றது. ஆனால் வேம்பிலிருந்து தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் எந்தப் பின் விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. மிகக்குறைந்த விலையில் விவசாயிகளுக்கு இது கிடைக்கிறது.

அமெரிக்காவில் வாசிங்டன் தேசிய விஞ்ஞான ஆய்வு மையத்தில் நடத்தப்பட்ட வேப்பமரம் பற்றிய ஆய்வுகள் பல திருப்புமுனைகளை உருவாக்கியுள்ளன.வேப்பமரத்திலிருந்து பெறக்கூடிய மருந்துகள் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கிறது.வேப்பமரம் அதிக எண்ணிக்கையில் வளர்வதனால் சுற்றுப்புற சூழல் பாதுகக்கப்படுகிறது.

அமெரிக்காவின் கண்
அமெரிக்காவின் கண் இப்போது வேப்பமரத்தின் மீது விழுந்திருக்கிறது. உலகில் வேப்பமரம் நிறைந்து காணப்படுகிற இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த வேப்பமரங்களின் காப்புரிமையையும் தனதாக்கிக்கொள்ள அமெரிக்கா முயன்று ஒரு தடவை தோற்றுப்போனது. ஆனால் அது இன்னும் வேறு பல வழிகளில் இதற்கான காய் நகர்த்தல்களை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்காவின் இந்த ஆசை நிறைவேறுமானால் வேப்பங்கனிகூட எழைகளுக்கு எட்டாக் கனியாகிவிடும்.அமெரிக்கா இதில் இவ்வளவு அக்கறை காட்டுவதிலிருந்தே புரிந்துகொள்வோம் வேப்பமரத்தின் மகத்துவத்தை.


                                                                                                                                             பிரபா

அன்பே சிவம்


    தமிழர்களின் வாழ்வியலோடுபின்னிப்பிணைந்திருப்பது சைவசமயமாகும். தமிழர்களின் கலை, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள்என்று அவர்களின் ஒவ்வொரு நகர்விலும் சைவமும் தமிழும் பிரிக்கமுடியாதவையாக இன்றுவரை இருந்துவருகிறது. சைவத்திலிருந்து மாறி வேறு மதங்களை தழுவி வாழுபவர்கள் மத்தியில்கூட இன்றும் சைவப்பழக்கவழக்கங்கள் மறாமல் இருக்கும் அளவிற்கு தமிழும் சைவமும் ஒன்றோடு ஒன்று பிணைந்திருப்பதைக் காணலாம்.சைவம் அன்பைத்தான் முதன்மையாக போதிக்கிறது அன்பே சிவம் என்பது சைவர்களின் மூல மந்திரமாகும்.
இன்று சைவசமயத்தின்மீது அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் மத்தியிலேயே சில அதிருப்திகள் எழுந்துள்ளன. சைவசமயத்தை சேர்ந்த இன்னும் பலர் வேறுமதங்களுக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்! பல காரணங்களைக் சொல்லலாம்.அவற்றில் முக்கியமான இரண்டு விடயங்களை இப்போது பார்ப்போம்.

*விளங்காத மொழியில் வழிபாடு செய்தல்.
*பூசை செய்பவர் யாதி அடிப்படையில் தெரிவு செய்தல்.

விளங்காத மொழியில்வழிபாடு
அதிகமான தமிழர்கள் சமஸ்கிருதம் தெரியாதவர்கள், ஆனால் சைவ ஆலயங்களில் ஏன் தமிழ் மொழியில் வழிபாடுகள் நடைபெறுவதில்லை என்று பெரும்பாலான தமிழர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது. மந்திரங்கள் ஓசை வடிவில் அமைந்தவை அதனாலேயே சமஸ்கிருததில் வழிபாடு நடைபெறுவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் தமிழிலும் அவ்வகை மந்திரங்கள் உண்டு என்று அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். எடுத்துக்காட்டு திருமூலர் எழுதிய திருமந்திரம்.

பூசை செய்பவரை யாதி அடிப்படையில் தெரிவு செய்தல்
உலகம் இருபத்தொராம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறது.இன்றும் தமிழர்கள் மத்தியில் சாதிமுறை தொடர்வது பெரும்பாலான தமிழர்களுக்கு வேதனை அழிக்கின்ற ஒரு விடயமாக இருந்துவருகிறது. பூசகரை யாதி அடிப்படையில் தெரிவு செய்தல் போன்ற சில முறைமைகளை தமிழாலயங்களில் இன்னும் கடைப்பிடிப்பதே இதற்கு காரணம் என்றும் அவர்களில் பலர் நம்புகின்றனர். ஏன் இன்னும் இந்த முறை தொடர்கிறது!  இவை நம்மிடம் இடையில் வந்து தொற்றிக்கொண்டவைதான். இன்றும் கதிர்காமம் போன்ற சில ஆலயங்களில் பிராமணர் அல்லாதோர் (வேட்டுவ இனத்தைச் சேர்ந்தவர்கள்) வருடத்தில் சில தினங்கள் பூசகராக இருந்து வழிபாடு செய்து வருகின்றமை யாவரும் அறிந்தவைதான். இது பண்டைய தமிழர்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்றுதான்.

      சைவசமயத்தின்மீது இளையோருக்கு ஈடுபாடு ஏற்படும் வகையிலும், அதன் மீது மற்ற மதத்தவர்கள் வைக்கின்ற குற்றச்சாட்டுக்களை பொய்யாக்கும் வகையிலும் வழிபாட்டு முறைகளில் சீர்திருதங்கள் கொண்டுவரப்பட வேண்டும். குற்றச்சாட்டுகளை களைவோம். புரியாத மொழியில் வழிபாடு, பூசை செய்பவர் சாதிமுறையில் தேர்ந்தெடுத்தல் இவை இரண்டும் உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப் படவேண்டிய முக்கிய விடயங்களாகும். இன்று சில கோயில்களில் கவனத்தில் எடுக்கப் பட்டிருப்பத்தை அவதானிக்க முடிகிறது. ஆனால் இந்த மாற்றம் மிக வேகமாக செயற்படுத்தப்பட வேண்டும்

    இன்று உலகில் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் மதங்களை எடுத்துப் பார்த்தால் காலத்திற்கு ஏற்ப நிகழ்ந்துவரும் மாற்றங்கள்தான்
இந்த வளர்ச்சிக்கு காரணமாகின்றது. சைவசமயத்தை பொறுத்தவரை புதிய மாற்றங்கள் எதுவும் தேவையில்லை.ஏற்கனவே நமது சமயத்தில் இதுவரை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாமல் இருக்கின்ற நல்ல விடயஙளை புகுத்துவதே போதுமானது. தமிழர்கள் இவற்றைக் கருத்தில்கொண்டு இனியும் காலம் தாழ்த்தாது செயற்பட வேண்டும்.

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"

                                                                                                              பிரபா


நினனத்ததெல்லாம் நடந்துவிட்டால்


நாம் இங்கு பணத்தைமட்டும் தேடிதேடி
வாழ்க்கையைத் தொலைத்துவிட்டோம்
அம்மா அப்பா,சகோதரங்கள், சொந்தங்கள்
என்று ஒன்றாய் கூடி வாழும்வாழ்க்கை பற்றிய
கனவில் மட்டுமே இருந்துவிட்டோம்
என் தங்கையின் அண்ணன்களின் திருமணத்திற்கு
மின்னஞ்சலில் வாழ்த்துச்செய்தி அனுப்பிவைத்தேன்
பத்து ஆண்டுகளுக்கு முன்பு என் அப்பா அம்மாவையும்
எனது இரண்டாவது அண்ணாவையும் கண்டு வந்தேன்
மூத்த அண்ணாவை நான் கண்டு
இருபத்திரண்டு வருடங்கள் ஓடிவிட்டது
என் தங்கை பக்கத்து நாட்டில் வசித்து வருகிறாள்
எங்கே வாழ்க்க்கை தொடங்கும் அது
எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது

அப்போதெல்லாம் இங்கு நம்மவர் மிகக் குறைவு
வீதிகளில் ஒரு தமிழனைப் பார்ப்பதே அரிது
பேச்சுத் துணைக்கு யாரும் கிடைக்க மாட்டார்களா
என்று நான் ஏங்கித்திரிந்த பொழுதுகள் அவை
எனது தாய் தந்தை சகோதரங்களின்
நினைவுகள் என்னை அதிகம் பதம்பார்த்தன
ஏமாற்றங்களும், தோல்விகளும்
என்னோடு தொடர்ந்து கொண்டே இருந்தன
வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாத
அந்த இளம் வயதில் நெஞ்சினில்
வலிகளை சுமந்து நான் நடந்தேன்
யாரிடமும் நான் என் துயரத்தைச் சொல்லி அழுததில்லை
நான் கோயிலுக்குச் செல்வதில்லை
*ஆனால் நான் கடவுளை அதிகம் நம்புபவன்*
எங்கும் நிறைந்தவன் இறைவன் என்பது என் கருத்து
எனக்கு கவலை அதிகமாகும்போது
அவன் என்னை கவனித்துக்கொண்டிருப்பான்
அவன்தான் நான் விரும்பியோ ,விரும்பாமலோ
எனக்கு ஒரு நிம்மதியான வாழ்வைத் தந்திருக்கிறான்
                                                                                          
                                                                                                      பிரபா